உலாத்தல்

எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு

Oct
8

திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation)..!

Filed Under Uncategorized


ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு.

சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்ட பூர்வகுடிகளைப் பலவந்த வெளியேற்றல்கள் துப்பாக்கி முனையில் தான் நடாத்த வேண்டி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பூர்வகுடிகள் கங்காருக்கள் போல வேட்டையாடப்பட்டனர். இந்தக் காலனித்துவம் நிகழ்ந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 750,000 பூர்வ குடிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது காலக் கணக்கெடுப்பு சொல்லும் செய்தி.


ஜனவரி 1, 1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என்று இந்த நாடு மாற்றப்பட்டபோதும் கூட இந்தப் பூர்வகுடிகள் தேசிய கணக்கெடுப்பில் அடங்காதவாறு சட்டம் இயற்றப்பட்டதோடு இவர்களை Fauna (நாட்டின் பூர்வ பிராணிகள்) என்ற வகையிலேயே அடக்கினார்கள்.


1910 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை சுமார் 100,000 வரையிலான சிறுவர்கள் பொலிசாரினாலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் தம் குடும்பங்களில் இருந்து பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். அப்போது இந்தக் கொடு செயலைத் தடுக்க சட்டமேதும் கிடையாது. அவுஸ்திரேலிய பூர்வ குடி என்ற முகவரி மட்டும் இருந்தால் போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறீஸ்தவ தேவாலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். இதுவரை இயற்கையோடு வாழ்ந்து தமக்குப் பிடித்த உணவை மட்டும் உண்டு வந்த இவர்களுக்கு அட்டவணைப் பிரகாரம் உணவு என்னும் பெயரில் ஏதோவெல்லாம் கிடைத்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அபலைகள் கூட உண்டு. அடிப்படைக் கல்வியாவது கிடைக்குமென்றால் அதுவும் இல்லை. காடு, கழனிகளுக்கான வேலையாட்கள் தான் உற்பத்தியாயினர்.

இவர்களைத் தான் ‘Stolen Generations’ அதாவது திருடப்பட்ட தலைமுறை என்று அடையாளம் இட்டு இன்று வரை அல்ல என்றுமே மாறா வடு முத்திரை பதிக்கப்பட்டுவிட்டது.

அடுத்ததாக ஆதிப்பழங்குடியோடு கலந்து பிறப்பெடுத்த ஐரோப்பிய கலவைக் குழந்தைகள் தான் அதிகளவு இலக்கு வைக்கப்பட்டனர். 1937 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலிய பூர்வகுடிகளோடு கலந்து பிறந்த ஐரோப்பியக் கலப்பினக் குழந்தைகளைப் பலவந்தமாகப் பிரித்தெடுத்து அரசின் மேற்பார்வையில் வாழவைக்கும் நடைமுறையும் பாய்ந்தது. இந்தக் கொடூரம் 1970 ஆம் ஆண்டு வரை பூர்வகுடிச்சனத்தொகையில் 10% இலிருந்து 30% வீதமாக இருந்திருக்கின்றது.

இதன்மூலம் இந்த நாட்டுக்கு வந்து காலனித்துவ அரசு அமைத்துக்கொண்டவர்கள் சாதிக்க நினைத்தது இது தான்:

1. இரண்டு மூன்று தலைமுறைக்கு தொடரும் இவ்வாறான பிரித்தெடுத்து வளர்த்தல் என்னும் முறைமை “பூர்வ குடிகள்” என்ற சமுதாயமே இல்லை என்ற நிலைக்கு மாற்றமுடியும்.

2. பூர்வகுடிகளின் பேச்சு வழக்கையும், சடங்குகளையும் இல்லாதொழித்தல்

இந்த நோக்கங்களை அமுல்படுத்த அப்போதிருந்த ஆட்சியாளர்கள் பகீரதப்பிரயத்தனம் கொண்டு உழைத்தார்கள். பிள்ளைகளைத் தேடி ஓடி வரும் பெற்றோர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். சில பிள்ளைகள் இந்த நாட்டிலேயே இல்லாமல் எங்கோ ஒரு இன்னொரு காலணி நாட்டுக்குத் தொலைந்து போயினர். இதை Rabbit-Proof Fence என்ற ஆங்கிலப் படமும் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

இன்று வரை தமது கலாச்சார வேர்களைத் தொலைத்தும், இயல்பு வாழ்வைத் தொலைத்தும் தற்கொலை, போதைக்கு அடிமையாதல் மன அழுத்தம், சட்டவிரோத நடவடிக்கைகள், என்று திசைமாறிய கங்காருக்கள் ஆகிவிட்டனர் இந்தச் சமுதாயத்தவர்.


காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? தொடர்ந்த நூற்றாண்டுக் கொடுமைகளுக்கு எல்லை போடுமாற் போல மனித உரிமைவாதிகள், மற்றும் பூர்வகுடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல் வேகவேகமாக, இன்னும் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.அதன் பலனாகத் தோன்றியதே 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த Bringing them Home’ என்ற விசாரணை நிகழ்வு.Federal Attorney-General, Michael Lavarch என்பவரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பூர்வகுடிகளைப் பிரித்தெடுத்துச் சின்னாபின்னப்படுத்திய வரலாற்றின் சாட்சியமாக 700 பக்க அறிக்கையில் 26 மே 1997 ஆம் ஆண்டு தேசிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை பூர்வகுடித் தலைமுறை ஒன்றுக்கு நிகழ்ந்த பல கோரமான உண்மைகளை ஆவணப்படுத்தியது. இந்த ஆவணப்பிரகாரம் 54 பரிந்துரைகளை வழங்கியிருந்ததும் அதில் மூன்று முக்கிய பரிந்துரைகளாவன:

1. அவுஸ்திரேலிய பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு முறைமையை ஏற்படுத்தல்.

2. பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு Van Boven பரிந்துரைத்த மனித நேயச் செயற் திட்டப்பரிந்துரைகளின் படி புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல். ( Wikipedia: Theo van Boven (born 1934) is a Dutch jurist and professor emeritus in international law.In 1977 he was appointed director of the United Nations’ Division for Human Rights. From 1986 to 1991, he was the UN’s Special Rapporteur on the Right to Reparation to Victims of Gross Violations of Human Rights and, from 2001 to 2004, Special Rapporteur on Torture)

3. அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல்.

இந்தப் பரிந்துரை குறித்த மேலதிக வாசிப்புக்கு Bringing them Home

இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய மாநிலப் பாராளுமன்ற முதல்வர்கள் இவ்வாறு தம் அனுதாபத்தையும், பொதுமன்னிப்பையும் விடுத்திருந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ்

“apologises unreservedly to the Aboriginal people of Australia for the systematic separation of generations of Aboriginal children from their parents, families and communities” - Mr Bob Carr, Premier of New South Wales, 18 June 1997

விக்டோரியா

“That this House apologises to the Aboriginal people on behalf of all Victorians for the past policies under which Aboriginal children were removed from their families and expresses deep regret at the hurt and distress this has caused and reaffirms its support for reconciliation between all Australians” - Mr Jeff Kennett, Premier of Victoria, 17 September 1997

மேற்குறித்த மாநிலங்கள் உட்பட அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலப் பாராளுமன்றுகள் தமது முந்திய வழித்தோன்றல்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றன.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த Mr John Howard, 26 August 1999 Motion of Reconciliation என்ற அடிப்படையில்
“deep and sincere regret that indigenous Australians suffered injustices under the practices of past generations, and for the hurt and trauma that many indigenous people continue to feel as a consequence of those practices.” என்று தமது அரசின் சார்பிலான அறிக்கையை விடுத்திருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகம் “unreserved apology” அதாவது எல்லை கடந்த மன்னிப்பாக இருக்க வேண்டும் என்று அப்போதய எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த தொழிற்கட்சித் தலைவர் Kim Beazley இன் எண்ணம் அப்போது நிறைவேறாது போயிற்று.


கடந்த 24 நவம்பர் 2007 நீண்டதொரு வனவாசத்தின் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட Kevin Rudd தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியாக “சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பை” இந்தத் திருடப்பட்ட சமுதாயத்துக்குக் கொடுப்பது என்று வாக்களித்தது. தற்போதய அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இந்தச் சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பு எப்படி அமையவேண்டும் என்று பூர்வகுடிகளின் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கின்றார்.
இவ்வாரம் பெப்ரவரி 13 ஆம் திகதி, புதன் கிழமை, அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றில் வைத்து காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

இந்த அரசு இப்படியானதொரு செயற்பாட்டில் இறங்கியிருப்பது உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் வெறும் வெற்றுக் காகித மன்னிப்புக்கள் அடுத்த தேர்தலுக்கான வாக்கு வங்கிக்கான முதலீடாக மட்டுமே அமையும். உளப்பூர்வமான, நேர்மையான அரசாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தொலைந்த தலைமுறைக்கு நிரந்தரமான இழப்பீட்டுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கூடவே அமெரிக்காவின் அடியாளாக இருந்து மற்றைய நாடுகளின் இறைமைக்குள் மூக்கை நுளைத்து அவுஸ்திரேலியா எல்லை கடந்த நாடுகள் மீதான எல்லை கடந்த பயங்கரவாதத்தை நிறுத்தி அந்தந்த நாடுகளில் நிமிஷத்துக்கு நிமிஷம் திருடப்பட்டு வரும் மனித உரிமைகளையும் காக்க முன்வர வேண்டும். இவையெல்லாம் செய்தால் மன்னிப்பே தேவையில்லை, மண்டியிட்டு வணங்குவார்கள் அம்மக்கள்.

அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இன்று பாராளுமன்றத்தில் கோரிய பொதுமன்னிப்பின் ஒளிப்பகிர்வு

பிரதமரின் இந்தச் சம்பிரதாயபூர்வ மன்னிப்புக் கேட்டலில் அடங்கியிருக்கும் அம்சங்கள் இவை தான்:

“Today we honour the Indigenous peoples of this land, the oldest continuing cultures in human history.

“We reflect on their past mistreatment.

“We reflect in particular on the mistreatment of those who were stolen generations - this blemished chapter in our nation’s history.

“The time has now come for the nation to turn a new page in Australia’s history by righting the wrongs of the past and so moving forward with confidence to the future.

“We apologise for the laws and policies of successive Parliaments and governments that have inflicted profound grief, suffering and loss on these our fellow Australians.

“We apologise especially for the removal of Aboriginal and Torres Strait Islander children from their families, their communities and their country.

“For the pain, suffering and hurt of these stolen generations, their descendants and for their families left behind, we say sorry.

“To the mothers and the fathers, the brothers and the sisters, for the breaking up of families and communities, we say sorry.

“And for the indignity and degradation thus inflicted on a proud people and a proud culture, we say sorry.

“We the Parliament of Australia respectfully request that this apology be received in the spirit in which it is offered as part of the healing of the nation.

“For the future we take heart; resolving that this new page in the history of our great continent can now be written.

“We today take this first step by acknowledging the past and laying claim to a future that embraces all Australians.

“A future where this Parliament resolves that the injustices of the past must never, never happen again.

“A future where we harness the determination of all Australians, Indigenous and non-Indigenous, to close the gap that lies between us in life expectancy, educational achievement and economic opportunity.

“A future where we embrace the possibility of new solutions to enduring problems where old approaches have failed. peA future based on mutual respect, mutual resolve and mutual responsibility.

“A future where all Australians, whatever their origins, are truly equal partners, with equal opportunities and with an equal stake in shaping the next chapter in the history of this great country, Australia.”

உசாத்துணை மற்றும் படங்கள்:
International Herald Tribune: www.iht.com
Wikipedia: www.wikipedia.org
European Network for Australian rights: www.eniar.org
www.news.com.au/

02 December 2008 இல் எழுதப்பட்ட பதிவு இது

Oct
3

சிட்னி வந்தால் “Jenolan Caves” போங்கோ

Filed Under Uncategorized

சிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். “சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது?, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே” என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த “Jenolan Caves”.

பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுகுக் கண்களில் இருந்து இந்தக் குகைகளும் தப்பி விடவில்லை. James Whalan என்ற உள்ளூர் குடியானவரின் பார்வையில் தான் இந்தக் குகைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வருஷம் 1838 ஆம் ஆண்டு என்று கொள்ளப்படுகின்றது.

James Whalan மற்றும் Charles இன் முயற்சியால் இந்தப் பகுதியில் இருந்த பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாளடைவில் அவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் செல்லும் இடமாக இந்த “Jenolan Caves” மாறி விட்டது.

இந்த “Jenolan Caves” பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்து ஒவ்வொரு குகைகளாகப் பார்ப்போரும் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு நல்ல குகையைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலே போதுமானது. ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் தனித்தனிக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இவை பெரியவர்களுக்கு 27 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து ஒவ்வொரு குகையின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றது. முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே செல்லுங்கள்.

ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு நேரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பேய்கள் உலாவும் குகை கூட இருக்கிறதாம். கிடுகிடுகிடுகிடு
எந்தக் குகைக்குப் பயணிக்க வேண்டும் என்று நுளைவுச் சீட்டை வாங்கியிருக்கிறீர்களோ அந்தக் குகை முகப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் அந்தக் குகையைச் சுற்றிக்காட்ட நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி ஒருவர் வந்தது, குறித்த குகையின் பெருமையைச் சிலாகித்துப் பேசி விட்டு எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக விளக்கம் சொல்லிக் காட்டுவார். கிட்டத்தட்ட 45 நிமிட நேரம் இந்தக் குகைப் பயணம் இருக்கும். கரடு முரடான பாதையாக மேலும் கீழும் ஏறி இறங்கும் பயணமாக இருந்தாலும் களைப்பே தெரியாத அளவுக்கு உள்ளே லேசான குளிரோடு இயற்கை செதுக்கி வைத்த நவீன காலச் சிற்பங்களாய் பவளப்பாறைகள் ஒவ்வொன்றும் தென்படும் காட்சிகளைக் காணும் போது உள்ளத்தில் உவகை வந்து சேரும். சில பகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளை இட்டு அலங்கரித்திருக்கின்றார்கள். இந்தக் குகைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டுபவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.

சுற்றுலா முடித்து வெளியில் வந்தால் பசி எடுக்கிறதா, அங்கேயே நல்ல உணவகமும் உண்டு. கூடவே “Jenolan Caves” இற்கு வந்து போனதன் ஞாபகமாக வாங்கி வைக்க ஞாபகச் சின்னங்களை விற்கும் கடையும் உண்டு.

Blue Mountains என்ற இன்னொரு முக்கிய சுற்றுலா மையத்துக்கு அருகைமையிலேயே இந்த இடம் இருப்பது இன்னொரு வசதியான அம்சமாகும். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளை இந்த இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் Sydney Explorer பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இடத்திற்கு நேரடியான புகையிரதச் சேவை கிடையாது. சொந்த வாகனத்தில் வருபவர்களும் தாராளமாகப் பயணிக்கலாம். குறுகலான பாதையாக மலையைச் சுற்றுச் சுற்றி மேல் முகட்டுக்கு வருவதற்குள் ஒவ்வாமையால் வாந்தி/சத்தி வருபவர்களும் உண்டு. இன்னொரு விஷயம், இந்த இடத்துக்கு சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது வாகனத்தில் தாராளமாக எரிபொருள் உள்ளதா எனச் சரி பார்த்த பின்னரே பயணப்படுங்கள். காரணம், இந்த இடத்துக்குப் பயணிக்கும் கிட்டத்தட்ட 45 நிமிட சுற்று வட்டாரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் காணக்கிடைப்பதே அபூர்வம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று மலையின் இடையில் இருந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும் போன தடவை போனபோது இழுத்து மூடப்பட்டிருந்தது.
ஒகே, சிட்னி வந்தால் “Jenolan Caves” போங்கோ, போயிட்டு வந்து அனுபவத்தைச் சொல்லுங்கோ

பிற்குறிப்பு: இந்தப் பதிவு ஏற்கனவே கங்காரு கொவாலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற அவுஸ்திரேலியக் கூட்டு வலைபதிவில் இட்டிருந்தேன். இனிமேல் தொடந்து இனிமேல் அவுஸ்திரேலிய நடப்பு வாழ்வியல்/வரலாறு/அரசியல்/புவியியல் சார்ந்த என் பதிவுகள் என் தனித்தளமான உலாத்தல் பதிவில் இடம்பெறும் என அறியத்தருகின்றேன்.

Dec
26

Hong Kong இல் ஒரு குட்டி இந்தியா

Filed Under Uncategorized

“நம்ம தமிழங்கள இப்பிடிக் கஷ்டப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க, பாருங்க” இப்படிச் சொன்னவர் Chungking Mansions பகுதியில் இருக்கும் ஹோட்டல் சரவணாவில் உணவு பரிமாறும் அந்த தஞ்சாவூர்க்கார முதியவர். Hong Kong இற்குப் பயணப்படும் போது அங்குள்ள இந்தியர்களது வாழ்வியலின் ஒரு பரிமாணமாக, அவர்களது வியாபார ஸ்தலங்களைச் சென்று பார்வையிட வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு உதவியாக இருந்தவர் நண்பர் மாயவரத்தான். Chungking Mansions பகுதிக்குச் செல்லுங்கள் அந்த இடத்தில் நிறைய உணவுக் கூடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனையாகும் கடைகளை இந்தியர்களே நடத்துகின்றார்கள் என்று என் பயணத்துக்கு முன்னதாகவே சொல்லி வைத்திருந்தார்.
Tsim Sha Tsui என்ற ரயில் நிலையத்தில் இறங்கி Nathan Road என்ற வழிப் பக்கமாக நடந்தால் சில நொடிகளில் எதிர்ப்படுகின்றது Chungking Mansions.


அந்தக் கட்டிடத் தொகுதி 17 அடுக்குகளைக் கொண்டது. அந்தக் கட்டிடத்தில் சீன, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள் மேலே இருக்க, கீழே இருக்கும் இரண்டு அடுக்குகளை நிறைக்கின்றன இந்திய உணவங்கள், மற்றும் தொழில் நுட்ப, இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடைகள். சீனர்களது வியாபார ஸ்தலங்கள் இருந்தாலும் அங்கே பெரும்பான்மையாக நிறைந்திருப்பது இந்தியர்களது கடைகளே.
வட இந்திய உணவகங்களோடு ஒன்றிரண்டு தென்னிந்திய உணவகங்கள் இருந்தாலும், “ஹோட்டல் சரவணா” என்ற தமிழ்ப்பெயரைத் தாங்கிய ஹோட்டல் தென்படவே. அந்த உணவகம் நோக்கிச் சென்றேன். ஒரு முதியவர் வாங்க தம்பி என்று சொல்லியவாறே இருக்கையைக் காட்டுகிறார். உணவுப்பட்டியலில் இருந்து “வெஜிடேரியன் தாலி மீல் வாங்கிக்குங்க, நல்ல சப்பாத்தி சுட்டுக் கொடுப்பாங்க” என்று அவரே பரிந்துரைக்க நானும் அதையே சொல்லி விட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.


“நான் தஞ்சாவூர்க்காரன் தம்பி, நீங்க எந்தப்பக்கம்?” என்று அவர் கேட்க
“நான் சிலோன் ஐயா”
“ஓ சரி சரி, ராஜபக்க்ஷ ஏதாச்சும் பண்றானா”
“இன்னும் ஒண்ணும் பண்ணல ஐயா” இப்படி நான் சொல்லவும் அதற்கு அந்த முதியவர் சொன்ன பதிலைத் தான் முதல் பந்தியில் சொல்லியிருக்கிறேன். அவர் அப்படிச் சொன்னதும் உண்மையில் நெகிழ்ந்து போனேன். எங்கோ இரண்டு மூலைகளில் இருந்து வந்து இன்னொரு அந்நிய தேசத்தில் இரண்டு தமிழர்களாக நாம் இருவரும் நம் மனப்பாங்கை அந்த நிமிடங்கள் பகிர்ந்த கணங்கள் மறக்கமுடியாதவை.

ஹோட்டல் சரவணாவில் சாப்பிட்டுவிட்டுக் கடைகளைச் சுற்றிப் பார்க்கின்றேன்.

ஒரு தமிழரின் நாணய மாற்று நிறுவனம், கண்ணாடிக்குப் பின்னால் ” தமிழ் வாழ்க” ;-)
இந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடை, இந்தியத் திரைப்படங்களின் டிவிடிக்கள், இசைத்தட்டுக்கள் விற்கும் கடைகள், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஐபாட் வரை நிறைந்திருக்கும் கடைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கின்றன.



000000000000000000000000000000000000000000000000000000000
ஹொங்கொங்கில் சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டிய இன்னொரு இடம் The Peak என்ற இடம். இந்த நாட்டின் உயர்ந்த இடமிது. Hong Kong Central ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிஷ நடையில் இந்த உச்சிக்குச் செல்லும் ட்ராம் வண்டிச் சேவையைப் பிடிக்கலாம். இரவு 12 மணி வரை தொடர்ந்து இந்த ட்ராம் வண்டிகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஓடித் திரிகின்றன. ஒரு நாள் மாலை ஏழுமணி வாக்கில் நானும் இந்தப் புதிய அனுபவத்தைப் பெற அங்கு சென்று ட்ராம் டிக்கட்டையும் வாங்கிக் கொண்டு பயணிக்கின்றேன்.

செங்குத்தான பாதையில் பல்லிபோல உரசிக்கொண்டே பயணிக்கும் இந்த ட்ராம் வண்டிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய வண்டிகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தின் போது ஹொங்கொங்கின் அழகை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே பயணிக்கிறது வண்டி. மெல்ல மெல்ல இருள் கவிய, அந்தக் கறுப்பு நிலப்படுக்கை எங்கும் ஒளிரும் வைரங்களை வைத்து இழைத்து போலத் தெரிகின்றது.

உச்சிக்குச் சென்றால் உணவகங்களுடன், இந்த நாட்டுக் கலைச் செல்வங்கள் ஓவியங்களாகவும் கைவினைப்பொருட்களாகவும் விற்பனையாகின்றன. இப்படியான இடங்களில் வழக்கத்தை விடப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நியாயமான விலையில் கிட்டுகின்றன.

இந்த இடத்துக்குப் பயணித்து உச்சியில் நின்று கீழே இருக்கும் நிலப்பகுதியைக் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதைகளில் நின்று இந்த நாட்டின் முழு அழகையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடியாக இருக்கின்றது. ட்ராம் வண்டிப்பயணத்தின் டிக்கட்டோடு The Sky Terrace இற்குச் செல்லும் டிக்கட்டையும் வாங்கி வைத்தால் அங்கிருந்து இன்னும் ஒரு அழகான தரிசனத்தைக் காணலாம்.

Madame Tussauds Hong Kong இங்கே அமைந்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். மெழுகு சிலைகளில் உயிர்பெற்றிருக்கும் ப்ரூஸ்லீயும், ஜாக்கி சானும் முகப்பில் நிற்கின்றார்கள்.

ஒவ்வொரு பகுதியாக நின்று நிதானித்துச் சுற்றிப்பார்த்து முடிக்க 11 மணியை அண்மிக்கிறது. ஹோட்டல் திரும்பலாம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ட்ராமைப் பிடிக்கின்றேன்.
Hong Kong உலாத்தலில் விடுபட்ட இடங்களை இன்னொரு பயணத்தில் கவனித்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவாறு உலாத்தலை நிறைவு செய்கின்றேன்.

Dec
14

Hong Kong இல் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு

Filed Under Uncategorized

இன்றைய வலையுலகச் சூழல் பல கோப்பெருஞ்சோழர்களையும், பிசிராந்தையார்களையும் உருவாக்கியிருக்கின்றது. அப்படி ஒரு முகமறியா நட்புத் தான் இதுநாள் வரை எனக்கும் Hong Kong அருண் இற்கும் வாய்த்திருந்தது. ஈழத்து உறவு என்ற வகையில் பல சந்தர்ப்பங்களில் எனது குணாதிசியத்தோடு பொருத்திப் பார்க்கும் நண்பர்களில் இவரும் ஒருவர். Hong Kong செல்வதற்கு முதல்நாள் தான் இவருக்கு ஒரு மின்னஞ்சல் இட்டிருந்தேன். உடனேயே தொடர்பிலக்கத்தோடு பதில் வந்திருந்தது. அங்கு சென்ற மூன்றாம் நாள் அருண் ஐச் சந்திக்கும் சந்தப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த Toast Box என்ற தேனீர்ச்சாலையில் தான் சந்திக்க ஏற்பாடானது. அருண் உடன் அவருடைய நண்பர், மட்டக்களப்பைச் சேர்ந்த குமாரும் இணைந்து கொண்டார். வலையுலக நட்பு வாயிலாக ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானதால் அருணைச் சந்திக்கும் போது முன்னர் சந்தித்துப் பிரிந்த நண்பரை நெடு நாளுக்குப் பின் சந்தித்த உணர்வே ஏற்பட்டது.

தான் சந்திக்கும் முதல் வலைப்பதிவர் சந்திப்பு இதுதான் என்றார் அருண். எனக்கோ Hong Kong இல் முதல் உலாத்தலிலேயே ஒரு வலைப்பதிவர் சந்திப்பும் இணைந்த திருப்தி. நான் நினைக்கிறேன் Hong Kong இல் நடந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இதுவாகத் தான் இருக்கும்.

கொழும்பில் இந்த ஆண்டில் சந்தித்த தாயக நண்பர்களுடான வலைப்பதிவர் சந்திப்புக்கு அடுத்து Hong Kong அருணை அதே உணர்வோட்டத்தோடு சந்திக்க முடிந்தது. வலையுலகத்தைக் கடந்து நமது தாயகம் என்று சுழன்று பாரத்தை ஏற்றி வைத்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். அருணோடு வந்த குமாரும் சகஜமாக Hong Kong இல் நம்மவர் வாழ்வைப் பற்றிச் சொல்லி வைத்தார்.

படத்தில் இடமிருந்து வலம்: குமார், அருண், நான்

பிரித்தானியர் ஆளுகையில் இந்தியர்கள் பலர் Hong Kong இற்கு வந்து குடியேறியிருக்கின்றார்கள். அவர்களின் தலைமுறைகள் இப்போது ஒரு பக்கம். அதைத் தவிர தொழில் நிமித்தமாக வந்து சேர்ந்த இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என்று ஒரு பக்கம். இவர்களைத் தவிர உலகெங்கும் சிதறுண்டு வாழ்வைத் தேடி வாழ்வைத் தொலைத்த ஈழத்தமிழர்கள் என்று இன்னொரு பக்கமாக இருக்கின்றார்கள். மேற்கத்தேய நாடுகள் பலவற்றில் நிரந்தர வதிவுடமை பெற்று ஓரளவு நிலையான எதிர்காலம் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்க, கீழைத்தேய நாடுகளில் இருக்கும் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளால் எதிர்காலம் தேடி நிதமும் காத்திருக்கும் அகதிகளில் இவர்களும் சேர்த்தி. ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றார்கள், எப்போதாவது ஒரு நம்பிக்கை விடிவெள்ளி வருமென்று. பின்னொரு நாளில் எமது தாயக உறவுகள் சிலரைச் சந்தித்தேன், ஓவ்வொருவருக்குப் பின்னாலும் விதவிதமாய் அறுநூறு பக்க நாவல் அளவுக்கு எழுதக்கூடிய கதைகள் இருக்கும்.

நண்பர் அருண், குமார் ஆகியோரோடு மாலை ஏழரை மணி வாக்கில் அமைந்த சந்திப்பு பத்து மணியைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. இன்னொரு தினம் சந்திக்க வேண்டும் என்று பிரிந்து கொண்டோம் அப்போது.


Hong Kong இல் தங்கியிருந்த ஐந்தாம் நாள் மாலை மீண்டும் அருணைச் சந்திக்க ஆவல் கொண்டு அழைத்தேன். அதே உற்சாகமான குரலில் கண்டிப்பாக வருகின்றேன் என்றார். வேலை முடிந்து ஹோட்டலுக்கு திரும்பும் போது வரவேற்புப் பகுதியில் காத்திருந்தார்.

Hong Kong Central புகையிரத நிலையம் வரை ரயிலில் பயணித்து அங்கிருந்து Star Ferry மோட்டார் படகு மூலம் Kowloon பகுதியை வந்தடைந்தோம். அந்த இடத்தில் காலாற நடக்கும் போது எதிர்ப்பட்டது Harbour City. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக இப்போதே களை கட்டத் தொடங்கியிருந்தது அந்தப் பகுதி. எங்கும் வண்ண விளக்குகள்,வித விதமான அலங்காரங்களாக ஏதோ புராண திரைப்பட செட் மாதிரி இருந்தது அந்தப் பகுதி. திருவிழாக் கூட்டமாய் எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள் அவ்வூர் மக்களும் வெளிநாட்டு யாத்திரீகர்களும்.

“இந்த இடத்துக்கு முன்னால் வந்திருக்கிறேன், அதோ தெரிகிறதே மரம், அது மட்டும் இருந்த பகுதி இப்போது அந்த மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றியே அழகான கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள் பாருங்கள்” என்று இந்த நாட்டினரின் இயற்கைச் செல்வம் குறித்த கவனத்தைச் சிலாகிக்கையில் எனக்கோ எம் தாயகத்தில் சொந்தத் தகப்பனை உயிரோடு சுவரில் மெழுகி மூடிய பரம்பரையின் கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தப் பகுதியின் துறைமுகப்பகுதியை ஒட்டி கூட்டம் கூடத்தொடங்கியது. “இந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் இரவு 8.10 மணிக்கு லேசர் விளக்குகளின் ஜால விளையாட்டு இடம்பெறும்” என்று அருண் சொல்லி சிறிது நேரத்தில் மெல்ல ஒளிக்கற்றையை கடலின் மறு அந்தத்தில் இருந்த பெருங்கட்டடத்தின் வாயில் இருந்து செலுத்தியது. மெல்ல மெல்ல கலர் ஜிகினாத் துணிகளைச் சுழற்றி ஆட்டுமாற்போலக் கடலின் நடுவிலே லேசர் ஒளி ஆட்டம் நடந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.







லேசர் ஆட்டம் முடிந்ததும், அங்கிருந்து மெல்ல நகர்ந்தால் சில அடி தூரத்தில் சினிமா உலகின் நினைவுச் செதுக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Hong Kong இன் பிரபலமான திரை நட்சத்திரங்களின் கை அடையாளத்தை அவர்களைக் கொண்டே பதிப்பித்து நடைபாதையில் பொருத்தியிருக்கின்றார்கள். Hong Kong இற்கு வெளியே ஹாலிவூட் வரை தடம்பதித்த ஜாக்கிசானின் உடைகளை விற்கும் கடை, ப்ரூஸ்லீயின் நினைவுச் சிலை என்று தொடர்கின்றது. அந்த இடமே ஒரு குட்டி சினிமா நகரில் நுழைந்த பிரமையை ஏற்படுத்த இவையெல்லாவற்றையும் ரசித்தவாறே நடக்கின்றோம். குளிர்காற்று துன்புறுத்தாமல் இதமாக வீசுகின்றது அந்த இரவில்.








Hong Kong இன் உயர்ந்த கட்டிடம் இது

Dec
11

Hong Kong உலாத்தல் ஆரம்பம்

Filed Under Uncategorized

1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம், அன்று தான் தாயகம் கடந்த வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட நாள். Cathay Pacific விமானத்தில் ஏறி அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்கின்றேன். இடையில் Hong Kong விமான நிலையத்தில் இடைத்தங்கலாகச் சில மணி நேரங்கள் விமானம் நிறுத்தப்பட, அந்த விமான நிலையத்தைச் சுற்றுகிறேன். செம்பாட்டு மண் வீதிகளில் சைக்கிள் ஓட்டிய கால்கள் மொசைக் தரையில். என்னைச் சுற்றிய கண்ணாடிக் கூண்டுகளுக்குள் கடை விரிக்கப்பட்டிருக்கும் நவீன உலகத்தின் காட்சிப் பொருட்களை ஏதோ புதிய லோகத்தில் இறங்கியது போன்ற பிரமையோடு பார்த்துக் கொண்டு வருகின்றேன். அந்தச் சில மணி நேர விமான நிலைய அனுபவம் மட்டுமே Hong Kong இல் எனக்கு அப்போது வாய்த்தது.

15 வருஷங்கள் கழிந்த நிலையில், கடந்த வாரம் திடீரென்று அலுவலக வேலை காரணமாக Hong Kong பயணிக்க வேண்டியிருந்தது. ஒரு வாரப் பயணம் என்றாலும் அலுவலக நேரம் தவிர்ந்த நேரத்தில் Hong Kong உலாத்தலைக் கவனிக்கலாம் என்று நினைத்தபோது நண்பர் மாயவரத்தான் இந்தியக் கடைகள் இருக்கும் இடம் பற்றிய விபரத்தைக் கொடுத்தார். ஈழத்துப் பதிவர் நண்பர் Hong Kong அருண் இற்கும் ஒரு மின்னஞ்சல் இட்டேன். கண்டிப்பாகச் சந்திப்போம் என்று தன் தொடர்பிலக்கத்தையும் தந்தார் அவர். Hong Kong காலநிலை குளிரை அரவணைக்கும் என்று வேலைத்தலத்தில் பயமுறுத்தினார்கள். எனவே அடுக்கிய உடுப்புக்களோடு குளிரைத் தாங்கும் உடையைம் இணைந்து கொண்டது.



அலுவலகத்தின் சார்பில் Hong Kong East என்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஹோட்டல் வர்த்த நிறுவனங்களுக்குத் தொழில் ரீதியான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே ஏதுவாக இருக்கின்றது. Hong Kong தீவில் எனது அலுவலகம் இருந்ததால் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கின்றது.

முதல்நாள் வேலை முடிந்து மாலை வேளை ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று நினைத்தபோது எமது சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து வந்த தான்யா இணைந்து கொண்டாள். அவள் அடிக்கடி Hong Kong வந்து போனவள். வியட்னாமில் பிறந்தாலும் சீன மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள். Hong Kong இல் எனக்குக் கிடைத்த முதல் அனுபவம் அவ்வூர் ரயில் பயணம் தான். எமது ஹோட்டலுக்கு அருகில் Tai Koo என்ற ரயில் நிலையம் இருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் MRT என்ற ரயில்சேவைக்கும் Hong Kong இன் MTR என்ற ரயில் சேவைக்கும் இடையில் ஆறு வித்தியாசங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிங்கப்பூர் போன்றே நவீனமயப்படுத்தப்பட்ட ஒரு ரயில் சேவை இது. தான்யா என்னை அந்த ரயில் நிலையத்தின் டிக்கற் விற்பனை முகவரிடம் அழைத்துப் போகின்றாள். சீன மொழியில் “இவருக்கு ஒரு Octopus Card கொடுங்கள் என்கிறாள்” ஐம்பது Hong Kong டொலர் வைப்புப் பணமாகக் கொடுக்க வேண்டும், மேலதிகமாக 100, 200, 500 என்று விரும்பும் அளவுக்கு ரீசார்ஜ் அளவை இந்தக் கார்டில் ஏற்றிக் கொள்ளலாம் என்கிறார் டிக்கற் கொடுப்பவர். என்னடா இது இவள் என்னை ஆக்டோபஸ் காட்டக் கொண்டு போகிறாளோ என்று அப்பாவித்தனமாக மனசு யோசிக்க, தான்யா தொடர்ந்தாள்.
இந்த Octopus Card ஐ நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் இது ரயில் பயணத்துக்கான டிக்கற் ஆக எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கூடவே கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள். பின்னர் தொடர்ந்த நாட்களில் Octopus Card என் உற்ற தோழன் ஆனான். இந்த கார்டை ஒரு கிரடிட் கார்ட் போலப் பாவிக்க முடியும். நாடு திரும்பும் போது வைப்புப் பணமாகக் கொடுத்த அந்த 50 Hong Kong ஐத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இந்த Octopus Card அட்டை குறித்து நண்பர் அருண் விக்கிபீடியாவில் விபரமாகக் கொடுத்திருக்கின்றார், அது இங்கே



Hong Kong இன் ரயில்சேவை உண்மையில் உலகத்தரமானது ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் Hong Kong இன் எல்லா மூலைகளை இணைக்கும் ரயில் சேவைகளும் கிட்டுகிறது. ஒவ்வொரு வழித்தடங்களுக்கான பாதையை வெவ்வேறு நிறங்கள் மூலம் வேறுபடுத்திக் காட்டுகின்றார்கள். அத்தோடு ஓவ்வொரு ரயில் நிலையமும் குட்டி ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்தில் சுத்தமாகமும் வெவ்வேறு நிறத்தால் வேறுபடுத்தியும் காட்டப்படுகின்றது. ரயில் நிலையத்தின் உள்ளேயும், பயணிக்கும் ரயிலிலும் சாப்பாட்டை, நீராகாரத்தை நுகர்வதைத் தடை செய்திருக்கின்றார்கள். மீறினால் தண்டப்பணம் கட்டவேண்டியது தான். ரயில் நிலையங்களை ஒட்டி எங்கும் ஒரு சின்ன கடை வளாகத்தைக் காணலாம். கூடவே வெளியே இணைக்கும் ஒவ்வொரு பாதைக்குமான வெளியேறும் பாதைகளை A, B, C, D என்று வகைப்படுத்தி எந்த எழுத்துக்கு எந்த வீதிகள் கிட்டிய வெளியேறும் பாதைகளாக உள்ளன என்று காட்டப்பட்டிருக்கின்றது. ஒரு ரயில்சேவையை மக்களுக்குக் களிப்பூட்டும் வகையில் வெற்றிகரமாகக் கொடுக்கும் உத்தியை இவர்களிடம் இருந்து தான் பெரியண்ணன்கள் கற்றுக் கொள்ள வேண்டும் போல. நவீன தரத்திலான Hong Kong ரயில்களில் பயணிக்கும் போது சிட்னியில் நிதமும் பயணிக்கும் சுடுகாட்டு ரயில் ஞாபகத்தில் வந்து பயமுறுத்தியது.


ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்றாக Hong Kong இன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இரண்டு அடுக்கிலான ட்ராம் வண்டிகள் இன்னும் தம் ஓட்டத்தைத் தொடர்கின்றன. அவுஸ்திரேலியாவில் சிட்னியின் மைய நகர்ப்பகுதியில் மட்டும், மற்றும் மெல்பனின் எல்லா இடங்களிலும் இந்த ட்ராம் வண்டிகள் இன்னும் ஓடுவது குறிப்பிடத்தக்கது. Hong Kong இல் பஸ் போக்குவரத்தில் குட்டி மினி பஸ்களின் சேவையையும் காணக்கூடியதாக இருந்தது.

Hong Kong இல் இறங்கினாலே ஏதோ ஒரு பெரும் கடை வளாகத்தில் இறக்கி விட்ட பிரமை தான். எங்கு திரும்பினாலும் பிரமாண்டமான அடுக்குகளில் கடைத் தொகுதிகள். உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து சீனாவில் இருந்து உற்பத்தியாகும் மலிவான சரக்குகள் வரை எல்லாமே கிட்டுகின்றது. மொத்தத்தில் இந்த Hong Kong ஐ shopping paradise அதாவது நுகர்வோரின் சொர்க்கம் என்றால் அது மிகையில்லை.

ஒரு மூலையில் இருந்த சின்னதொரு கடைவளாகத்தின் அட்டகாசமான விளம்பரப்பலகைகள்

தானியங்கி விற்பனைக்கருவியில் குடை விற்பனைக்கு ;-)
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் இற்கு இரண்டு முறை பயணப்படவேண்டி இருந்தது. சீனா என்றால் ஏதோ குடிசை வீடுகள் நிறந்த தேசம் என்ற என் நினைப்பில் மண் அள்ளிப்போட்ட பயணங்கள் அவை. அங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள், தரமான போக்குவரத்து சேவைகள் என்றிருந்தாலும் அங்கே ஒரு பெரும் தலையிடியாக இருந்தது மொழிப்பிரச்சனை. ஒரு முறை பெரும் கடைத்தொகுதிக்குள் சுற்றிக் கொண்டிருந்த நான் நம்பர் 1 போகவேண்டும் என்று எதிர்ப்பட்டவர்களை எல்லாம் பாத்ரூம் எங்கே டாய்லெட் எங்கே என்று கேட்டுக் களைத்து ஐந்து விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக் காட்டியும் யாரும் புரிந்து கொள்ளாத அவஸ்தை இருந்தது. ஆனால் Hong Kong அந்தப் பிரச்சனை இல்லை. ஆங்கிலத்தை கடைக்கோடி மனிதனும் சரளமாகப் பேசுகின்றார், புரிந்து கொள்கின்றார்.

Hong Kong, 1 ஜீலை வரை ஆங்கிலேயர் ஆளுகைக்குக் கீழ் இருந்து பின்னர் சீனாவின் நிர்வாக அலகுகளில் ஒன்றாகத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சீனாவின் கைக்கு இந்த நாடு போகும் போது Hong Kong மக்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதை இப்போதும் என் மனத்தின் டிவி திரை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. எங்கே சீனாவின் கம்யூனிச வைரஸ் நம்மைத் தாக்கிவிடுமோ என்று அப்போது Hong Kong மக்கள் பயத்தின் எல்லையில் இருந்ததும் நியாயமான ஒன்று. சிங்கப்பூரில் மலேசியர்கள் என்றால் ஒரு எள்ளல் பார்வை இருக்கும் அதே தோரணை சீனாவில் இருந்து வருபவர்களை நோக்கி Hong Kong காரரிடம் இருக்கும். Hong Kong இன் முக்கிய பேச்சு மொழியாக சீன மொழியின் கூறு Cantonese இருக்கின்றது.


Hong Kong பாராளுமன்றக் கட்டடம்

“Hong Kong சீனாவிடம் போனதால் என்ன நன்மை கிட்டியிருக்கு” என்று தான்யாவிடம் கேட்டேன்.
“நிறைய விடுமுறைகள் கிட்டியிருக்கு, அவ்வளவு தான்” என்றாள் அவள்.

அடுத்த நாள் வலைப்பதிவூடாகக் கிட்டிய நம் தாயக உறவு அருண் ஐ சந்திக்கும் ஆவலோடு காத்திருந்தேன்.